Friday, May 09, 2008

மனித நேயத்திற்கு ஒரு வரைவிலக்கணம்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் - திருக்குறள்
உனக்கு தீங்கு செய்தவருக்கும் நீ நன்மையே புரிவாய்! - முஹம்மது நபி
**********


இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) இஸ்லாமியப் பிரச்சாரம் தொடங்கிய காலம் இது!

ஒரு நாள் மக்கா நகர வீதி வழியாக நபியவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது வயதான மூதாட்டி ஒருவர் மூட்டை முடிச்சுகளை சுமந்த வண்ணம் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.

நபியவர்கள் அந்த வயோதிபப் பெண்ணிடம் சென்று “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! யான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று கேட்டார்கள்.

“இந்தாப்பா ரொம்ப நன்றி!” என்று கூறி கிழவி துணி மூட்டையை நபி அவர்களிடம் கொடுத்தாள். “திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று மாநபியவர்கள் பேச்சுக் கொடுத்தார்கள்.

“என் வயிற்றெரிச்சலை கிளறாதே! நான் எங்கேயாவது போகிறேன். முகம்மது என்றொருவர் புதிதாக வந்து தான் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டுமாம் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்? எங்களது சனங்கள் அவரைப் பற்றி பலதும் பத்தும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் எனக்கு குடியிருக்க விருப்பமில்லை. அதுதான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்..” என்று தொடர்ந்தாள் கிழவி. முஹம்மது நபி அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தார்கள்.

“எனது சாமான் மூட்டையைத் தந்து விட்டு சுமை கூலியாக இந்தச் சில்லைறையை வைத்துக் கொள்” என்று அவள் கூறி சில திர்ஹம்களை நீட்டினாள். கிழவியிடம் அவளது பொதியைக் கொடுத்த நபி அவர்கள் கூலியாகப் பணம் ஏதும் வேண்டாம் என்று உறுதியாக மறுத்து விட்டார்கள்.

கிழவிக்கு ஆச்சரியம்! “பலவீனமானவர்களிடம் தட்டிப் பறித்துக் கொண்டு ஓடுகின்ற கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனிதரா? நீ யாரப்பா? உன் பெயர் என்ன?” என்று அந்தக் கிழவி கேட்டாள்.

அதற்கு நபியவர்கள், “இதுவரை குறை கூறிக் கொண்டு திட்டிக் கொண்டு வந்த இறைத்தூதர் வேறு யாருமல்ல. அந்த முஹம்மது நான் தானம்மா” என்று பதிலளித்தார்கள்.

“இவ்வளவு நல்ல பண்புகள் நிறைந்தவரையா நான் திட்டி வந்தேன்? என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று கூறி அவள் மனம் வருந்தினாள்.

இந்த சம்பவம் அடிக்கடி பரவலாக நினைவு படுத்தப் பட்டாலும் இதில் அடங்கியுள்ள தத்துவங்களை நாம் ஆழமாக யோசிப்பதில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூதாட்டிக்கு உதவும்போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அவள் தெரியாத்தனமாக கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார். பலவீனமானவரின் சுமையைத் தனது சுமைபோல தோளில் சுமந்து கொண்டார். இந்தப் பணிக்காக அவர் எந்த லோகாதாய நன்மைகளையும் எதிர்பார்க்கவில்லை. இதுவே உண்மையான மனித நேயமாகும்.

- ஹஸன் அஸ்ஹரீ எழுதிய 'மனிதன் புனிதனாக' நூலிலிருந்து...

0 comments: