Monday, May 05, 2008

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள்!

பூமியில் ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளும் வானில் தனது இரு இறக்கைகளை விரித்துப் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற சமூகங்களே அன்றி வேறில்லை.

திருக்குர்ஆன் 6:38

**********

நேர்மையாக இரு! உண்மையே பேசு!
எல்லையற்ற பொறுமை கொள்!
அன்புக்காக நோன்பிரு!
அது உன் செயல்களை வரையறுக்கட்டும்!
எல்லோருடைய நம்பிக்கையும் பெறுக!
அனைவரையும் சமமாக மதி!
சிந்தித்து அறிவுடன் செயல்படு!
வலிமையும் கருணையும்
நெஞ்சில் நிலைக்கட்டும்!
எல்லா உயிர்களிடமும் கருணை காட்டு!
- ஜேம்ஸ் ஆலன்

**********

God is love
and he who lives in love lives in God and
God lives in him!

**********

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுமாறு எல்லா சமயங்களும் வலியுறுத்துகின்றன. அன்பும் ஜீவகாருண்யமும் எவரிடத்தில் காணப்படுகின்றதோ அவர் புனிதத் தன்மைக்கு மிக அண்மையில் இருக்கிறார்.

முஹம்மது நபி (ஸல்) கீழ்வரும் சம்பவத்தைக் கூறி இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

விபச்சாரியான பெண்ணொருத்தி ஒரு நாள் சுட்டெரிக்கும் வெயிலில் பாலைவனத்தினூடாக சென்று கொண்டிருந்தாள். தண்ணீர் தாகத்தால் நா வறண்டது. ஒரு கிணற்றை அண்மித்து அதனுள் இறங்கி தாகம் தீர நீர் அருந்தி விட்டு கிணற்றிலிருந்து வெளியேறினாள்.

அப்போது நாயொன்று நாவை தொங்கப்போட்டுக் கொண்டு ஏக்கம் நிறைந்த பார்வையோடு கிணற்றுக்கு வெளியே நீருக்காக ஏங்கி நின்றதை இப்பெண்மணி அவதானித்தாள். அதன் மீது இரக்கம் கொண்டு தனது காலுறையை கழற்றி அதில் நீர் நிரப்பி நாயின் வாயில் புகட்டி அதன் தாகத்தை போக்கி மகிழ்ந்தாள்.

இவளது இந்த ஜீவகாருண்யச் செயலைப் பாராட்டி இறைவன் அவளது குற்றம் குறைகளையெல்லாம் மன்னித்து அவளுக்கு சுவனம் உண்டு என்ற சுப செய்தியை அறிவித்தான் - ஹதீது தெளிவுரை

இன்னொரு பெண்ணைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) பிரஸ்தாபித்தார்:

"அவள் நல்லவள் என்றாலும் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தாள். அதனைக் கட்டிப் போட்டு அதற்கு ஒழுங்காக தீனி போட்டு பராமரிக்காத காரணத்தால் அவளுக்கு நரகம்தான் ஒதுங்குமிடமாகும்."

பிள்ளைகள் வீட்டில் விளையாட்டுக்காகவேனும் ஈ, எறும்பு, தும்பி போன்ற பூச்சி இனங்களைக் கொல்ல அனுமதிக்காதீர்கள். சாதாரணமாக இந்த உயிர் வதை பிற்காலத்தில் அவர்களைக் கொலைஞர்களாக ஆக்கிவிடவும் கூடும்.

- ஹஸன் அஸ்ஹரீ எழுதிய 'மனிதன் புனிதனாக' நூலிலிருந்து...

0 comments: