Wednesday, October 01, 2008

எது தர்மம்?


"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.

மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.

"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022.

தர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது மட்டுமே!' என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.

இந்த நபிமொழி மூலம், சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவதுதான் தர்மம் என்று பலர் கருதுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பதை உணர்த்தி, மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து வந்த தர்மம் குறித்த தவறான கருத்துக்கள் அடங்கிய மூடத்திரைகளை இறைவன் அழகாக அகற்றுகின்றான்.

தர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமன்று என்பதை இந்நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.

அத்துடன், தர்மம் எனும் பெயரில் மக்களை மானமிழந்து, மதியிழந்து செயல்படும் நிலையிலிருந்து வெளியேற்றி தர்மத்தின் மகத்துவத்தையும், அதே நேரத்தில் உழைப்பின் அவசியம் மற்றும் சிறப்பையும் இந்த நபிமொழி மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தொடர்ந்து, தேவையுடைய ஒருவருக்கு அவர் தம் பணிகளில், அல்லது அவரது தேவைகளை நிறைவேற்ற உடலாலோ உள்ளத்தாலோ உழைப்பதும் தர்மமாக கணிக்கப்பட்டு அவருக்கும் இதன் மூலம் நற்பலன்கள் பெற இயலும் என்று கூறி ஒரு சுமூகமான, புரிந்துணர்வுடன் கூடிய சமூக ஒற்றுமையைக் கொண்டதொரு வாழ்க்கை முறையை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும் உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும் உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஒருவருக்குச் செல்வமோ, உடல் வலிமையோ, ஆற்றலோ, நாவன்மையோ அல்லது இதில் எதுவுமே இல்லையென்றாலும் (சொல்லாலும் செயல்களாலும் உள்ளத்தாலும் பிறருக்கு ஏற்படும்) தீங்குகளிலிருந்து விலகி இருப்பதும் தர்மம் ஆகும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது.

"ஒருவருக்குத் தீங்குகள் ஏற்படுத்தாமல் செயல்படுவதும் நன்மையை பெற்றுத் தரும்" எனும் ஓர் உன்னதமான உயரிய சிந்தனையை இந்த இரத்தினச் சுருக்கமான நபிமொழி எடுத்தியம்பி கலாச்சாரச் சீரழிவுகளில் அலைமோதி, மனித நேயமும் ஒழுக்க மாண்புகளையும் மறந்து மனித சமூகத்திற்கெதிராக பல்வேறு அக்கிரமங்கள் புரிந்து வாழ்ந்து மரணிக்கும் மனித சமூகத்திற்குத் தெளிவான வாழ்வியல் நெறியை அக்கறையோடு இந்நபிமொழி நினைவூட்டுகின்றது.

இறுதியாக, நன்மையென்பது அதை செய்பவருக்கு மட்டுமன்றி அது யாருக்கு செய்யப்படுகிறதோ அவருக்கும் நன்மையென்பதுடன், யாருக்கும் நன்மை செய்ய இயலவில்லையெனினும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருப்பதே அவருக்கு (தர்மம் செய்த) நன்மையென்று கூறி, ஒவ்வொரு தனி மனிதனையும் ஒட்டு மொத்த சமூகத்துடன் மனித நேயத்துடன் வாழுமாறு இந்த நபிமொழி பிணைத்து விடுகிறது.

இது போன்ற செயல்களின் நற்பலன்கள், மறுமையில் மட்டுமின்றி இம்மை வாழ்க்கைக்கும் பயனுள்ளது என்பதை மக்கள் அனைவரும் உணர முற்பட்டால், உண்மையிலேயே மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் நிலை மிகவும் சிறப்பானதாக மாறிவிடும். மறுமையில் வெற்றியும் பெற வழி பிறக்கும். எல்லாம் வல்ல (இவ்வுலகின் ஏக இறைவனாகிய) அல்லாஹ் நமக்கு அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள் புரிய எந்நேரமும் அயராமல் பிராத்திப்போமாக. ஆமீன்.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Sunday, July 13, 2008

'சீரியஸ்' இலக்கியவாதிகளின் சீரழிவு!

மிகவும் வருத்தமாக இருக்கிறது!

தமிழின் நவீன இலக்கியவாதிகள் - 'சீரியஸ்' படைப்பாளிகள் என்றெல்லாம் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் மதுவுக்கு வக்காலத்து வாங்குவதையும், போதையில் மூழ்கித் திளைப்பதையும் பார்க்கும்போது மனம் பெரிதும் சங்கடப்படுகிறது.

மதுவை ஆதரிப்பதும், மதுவில் மூழ்குவதும், மதுவைக் கொண்டாடுவதும், அந்த அருவருப்புகளை அப்படியே இதழ்களில் பதிவு செய்வதும்...

படைப்பாளிகளுக்கு சமுதாய உணர்வு தேவையில்லையா?

தமிழின் மிக நவீன கவிஞர்களில் ஒருவரான மனுஷ்ய புத்திரன் சாராயச் சாவுகள் பற்றி 'உயிர்மை' இதழில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்தச் சாவுகளைத் தடுக்க அவர் சொல்லும் பரிந்துரைகள் என்ன தெரியுமா?

கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்கிறார். மது ஓர் உணவுப் பழக்கம் என்றும், சைவ உணவுக்காரர்களுக்கும் அசைவ உணவுக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதே குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்றும் கூறுகிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான மதுவை குறைந்த விலையில் அரசே வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சரி, இன்னொரு 'சீரியஸ்' படைப்பாளியின் விழாக் காட்சியைப் பார்ப்போம்.

திருக்கடையூரில் நடைபெற்ற விக்ரமாதித்யனின் நூல் வெளியீட்டு விழா குறித்து 'தீராநதி' (மே 2008) இதழில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார்:

'...நூல் வெளியீட்டு அரங்கு ஏகப்பட்ட கொண்டாட்டங்களுடனும் கும்மாளங்களுடனும் காட்சியளித்தது. கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாமல் இப்படி எல்லோரும் அரைமயக்கத்தில் இருப்பதை சுந்தர சுகன் மேடையிலிருந்து கண்டித்துக் கொண்டிருந்தார். ... என்னைக் கட்டித் தழுவிய விக்ரமாதித்யன் அவருக்கு யாரோ பரிசளித்திருந்த ஒரு 'மேன்ஷன் ஹவுஸ்' மதுப் புட்டியை பரிசளித்தார். நன்றியுடன் பெற்று பத்திரமாக மூலையில் வைத்தேன். அன்று மகாசிவராத்திரி, பெரிய வெள்ளி முதலான காரணங்களால் 'கடைகள்' கிடையாதே! ஏற்கனவே மதுப் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்த நண்பர்கள் ஒரு சில கணங்களில் அந்தப் புட்டியை 'லபக்'கிக் கொண்டனர். '

அடுத்து, சென்னையில் ஒரு தமிழ்நாவலின் (இந்த நாவலாசிரியரும் தமிழின் 'சீரியஸ்' எழுத்தாளர்தான்) ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா..!

அந்த விழாச் செய்திகளை ஒரு 'சீரியஸ்' இதழில் ஒரு 'சீரியஸ்' எழுத்தாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

'எந்த அலுப்பூட்டலும் இல்லாமல் சொற்ப நேரத்தில் வெளியீடு முடிந்தபின் கோலாகலங்கள் தொடங்கின. கைகளில் மதுக்கிண்ணங்களுடன்... இரவு ஒன்பது மணிக்கு மேல் மத்திம போதையுடன் இறங்கி வந்த எனக்கு அடுத்த வாரம் எல்.எல்.ஏ பில்டிங்கில் ஓர் இலக்கிய கூட்டம் இருக்கிறதே என்று நினைவு வந்தது. போதை இறங்கிக் கொண்டிருந்தது.'

குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் நவீன இலக்கியவாதிகளின் தனிப்பட்ட உரிமை. அதில் நான் தலையிடவில்லை.

ஆனால் தங்களின் கேடுகெட்ட குடிப்பழக்கத்தை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி இப்படி தூக்கிப் பிடிப்பது என்ன நியாயம்?

இவர்கள்தாம் தமிழின் மிக நவீன, 'சீரியஸ்' இலக்கியப் படைப்பாளிகள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது...

தலையே சுற்றுகிறது..!


Wednesday, July 09, 2008

இஸ்லாமிய போதனைகள் - 7. நாவைப் பேணுக!

நாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்!

உண்மை பேசுக!


அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!

உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!

யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23


Sunday, June 29, 2008

நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!

இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!

முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.

ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்கு ‘ஷஹாதா’ சொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.

ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். கார்களை சுத்திகரிப்புச் செய்வது போல, இது ‘ஆன்மீக சுத்திகரிப்பு’ என்று சொல்லலாம். சுத்திகரிப்புச் செய்யப் பட்ட கார் வழுக்கள் நீக்கப் பட்டுப் பளபளப்பது போல அவர் பாவங்கள் நீக்கப்பட்டு, வாழ்வதன் நோக்கம் தெளிவாகி புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால், அடிப்படையில் அவர் அதே மனிதர்தான். ஒரு ஃபோர்டு கார் சுத்திகரிப்புச் செய்யு முன்னரும் ஃபோர்டு காராகத்தானே இருந்தது?.

சில புதிய முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு இதைப் புரிந்து கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது; உண்மையைச் சொல்வதென்றால், சில புதிய முஸ்லிம்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொழுகை, நோன்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, பெயர், தாடி, ஆடை போன்ற புறத் தோற்ற மாறுதல்களிலும் அவசரம் காட்டுவது வழக்கிலிருக்கிறது.

இந்த மாறுதல்களிலும் தவறேதுமில்லைதான்! இஸ்லாம் சிலவற்றைக் கடமையாக்கியிருக்கிறது. சிலவற்றை முஸ்லிம்களுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டவற்றையும் செய்தால்தான் ஒருவர் முழு முஸ்லிமாக இருக்க முடியும் என்பதல்ல. சில சமயங்களில் ஒரு புதிய முஸ்லிம் தன் புறத் தோற்றங்களை மாற்றிக் கொள்வதில் காட்டும் அவசரம் அவரது முஸ்லிமல்லாத பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் மனம் புண்படவும் வாய்ப்பிருக்கிறது.

“உன் பெயரை ஏன் ஒரு அரேபியப் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு வைத்த பெயரில் என்ன குறை கண்டு விட்டாய்?”

“ஏன் இப்படி வித்தியாசமான உடைகளை அணியத் தொடங்கி விட்டாய்?”

“முக்காடு அணிய வேண்டியத் தேவை திடீரென்று உனக்கு ஏன் ஏற்பட்டது? நான் பார்க்கும் ஆசிய முஸ்லிம் பெண்களில்கூட பாதிப் பேர் இதை அணிவதில்லையே?”

“இப்படி எல்லா நேரங்களிலும் பள்ளிவாசலே கதி என்று கிடந்தால், உன்னை யாராவது மூளைச் சலவை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதியைச் சேர்த்து வைத்துக் கொள்ள என்னால் முடியாது”

இப்படியெல்லாம் கேள்விகள் பிறக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால், இது போன்ற எதிர்வினைகளை எதிர்கொள்வது கூட ஆரோக்கியமானதொரு விஷயம்தான். முஸ்லிமல்லாத குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாம் பற்றிச் சரியான முறையில் அறிமுகம் செய்விக்கப் படாததால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.

இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.

“இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்தில்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.”

“இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்”

“அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”

இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

யுவான் ரிட்லி

ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக் கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோ’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப் பட்டார்.

பெண்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்” என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.

2003-ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.

ஜான் ஸ்டாண்டிங்

ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார்.

அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.

ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது என்பது ஜானின் நம்பிக்கை). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

இஸ்லாம் உண்மையில் இது போன்ற மாற்றங்களை கட்டாயமாக்கியிருக்கிறதா?

அகீல் பர்ட்டன்

அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.

ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.

ஷஹ்நாஸ் மாலிக்

வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.

உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.

இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்’ என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. மாற்றங்களைத் தேடும் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அதில் இஸ்லாமிற்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புப் பாலத்தை ஒருவேளை நாம் காணக்கூடும்.

மூலம்: http://news.bbc.co.uk/1/hi/programmes/3663771.stm

தமிழில் : இப்னு பஷீர்

Sunday, June 22, 2008

இஸ்லாமிய போதனைகள் - 6. இலஞ்சம் கொடுக்காதீர்!

மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்:மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது.

இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும், ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது.

லஞ்சம் கொடுக்கவில்லை எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது. லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனங்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது. இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்) அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

Thursday, June 19, 2008

இஸ்லாமிய போதனைகள் - 5. குர்ஆனில் பத்து கட்டளைகள்!

திருமறை வசனங்கள் 6:151-152 கீழ்க்கண்ட பத்து கட்டளைகளை அறிவிக்கின்றது:

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைசெய்தவற்றைக் கூறுகிறேன்’ என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை:-

1. அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்கக் கூடாது.

2. பெற்றோருக்கு உதவுங்கள்.

3. வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

4. வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்.

5. அல்லாஹ் தடைசெய்துள்ள எவரையும் உரிமையிருந்தாலே தவிர கொல்லாதீர்கள். நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதையே உங்களுக்கு உபதேசம் செய்கிறான். (6:151)

6. அநாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை நியாயமான முறையிலே அன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்.

7. அளவையும், நிறுவையையும், நேர்மையாக நிறைவேற்றுங்கள்.

8. எவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் சிரமப்படுத்துவதில்லை.

9. உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்.

10. அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். (6:152)

இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனையே பின்பற்றுங்கள். பலவழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்"

நன்றி: அல்பாக்கவி.காம்

Wednesday, June 18, 2008

இஸ்லாமிய போதனைகள் - 4. கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்!

"(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள்." (அல்குர்ஆன் 3 : 134)


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும் 'கோபம் கொள்ளாதே' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல் : புகாரி)


"கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்" என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரி , முஸ்லிம்)


பொதுவாகவே ஷைத்தான் மனிதனை ஆக்ரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, உப்புப்பெறாத விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை ஏச்சுப் பேச்சுக்களையும் மீறி சட்டை கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.


மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது' என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுற்தாற் போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!


கோபம் மனிதனுக்கு தேவை தான்! ஆனால் அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!


Tuesday, June 17, 2008

இஸ்லாமிய போதனைகள் - 3. யாருக்காகவும் பொய் சாட்சி சொல்லாதீர்கள்!

இறைநம்பிக்கையாளர்களே!

நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாக(வும்), உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ, அல்லது (உங்கள்) உறவினர்களுக்கோ பாதகமாக இருப்பினும் சரியே, அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்.

(நீங்கள் எவருக்கு எதிராகச் சாட்சி கூறுகின்றீர்களோ) அவர், செல்வந்தராக(வோ), அல்லது ஏழையாக(வோ) இருந்தாலும் சரியே. ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில்) மிக மேலானவன்.

எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்.

இன்னும், நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும், அல்லது புறக்கணித்து விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

(திருக்குர்ஆன் - 4:135)

Sunday, June 15, 2008

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.


ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.


இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.


மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.


டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.


'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.


மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.


62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.


ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.


'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார்.


Thursday, June 12, 2008

இஸ்லாமிய போதனைகள் - 2. மனிதன் யார்?


மனிதன் யார்? அவனது தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?


இறைவனின் அழகிய படைப்பு:

"திண்ணமாக நாம் மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம். .. நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம்" (திருக்குர்ஆன் 95:4, 17:70)


இறைவனின் உயிர்க்காற்று ஊதப் பட்டவன்:

(இறைவனின் சிறப்புத் தன்மைகளை பிரதிபலிப்பவன்) (திருக்குர்ஆன் 15:29)


பிறப்பில் பாவமற்றவன்:

"எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளராவார். மேலும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்." (திருக்குர்ஆன் 6:164)


பிறப்பில் சமமானவன்:

"மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (திருக்குர்ஆன் 4:1)


"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்" (திருக்குர்ஆன் 49:13)


அகிலம் அனைத்தும் மனிதனுக்காகவே:

"இறைவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப் படுத்தி வைத்துள்ளான்" (திருக்குர்ஆன் 2:29, 16:12)


இறைவனின் பிரதிநிதி:

(இறைவனின் கட்டளைகளை ஏற்று செயல்படுபவன்): "உங்களை பூமியில் தன் பிரதிநிதிகளாக ஆக்கியவன் அவனே" (திருக்குர்ஆன் 6:165)


Wednesday, June 11, 2008

கூடையும் சிறுவனும்!


வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை அறையில் அமர்ந்து குர்ஆனை ஓதுவது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது. மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது தாத்தாவைப் போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின் பேரன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

ஒருநாள் பேரன் தாத்தாவைப் பார்த்து, "தாத்தா! உங்களைப் போன்றே நானும் குர்ஆனைப் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி குர்ஆனை மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல் குர்ஆனைப் படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?" என்று கேட்டான்.

சமைத்துக்கொண்டிருந்த தாத்தா, கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து, "இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!" என்றார். பேரனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக் தாத்தாவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட தாத்தா சிரித்துக் கொண்டே, "சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!" என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.

இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக பேரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட, "இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை தாத்தா!" என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த தாத்தா, "எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!" என்று அவனைப் பார்த்து கூறினார்.

சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும், தாத்தாவிற்கு தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சிறுவன். ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.

"தாத்தா! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?" என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.

"உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!" என்றார் தாத்தா.

தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த பேரன் முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் தாத்தாவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.

ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.

அன்புடன் தன் பேரனை வாரி அணைத்துக் கொண்ட தாத்தா சொன்னார், "ஒருவர் தொடர்ந்து குர்ஆனை ஓதும் பொழுதும் இதுவே நிகழ்கிறது. குர்ஆன் ஓதும் போது அதன் பொருளறிந்து ஓதி அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் பொருளறியாமல் அதை ஓதினாலும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர் ஓதும் பொழுது ஓதுபவருக்கு அது புரியாமல் போனாலும், ஓதுவது அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும் ஓதுபவரின் உள்ளம் இறையச்சத்தால் பரிசுத்தம் அடைகிறது. அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!" என்று கூறினார்.

இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன், "மிக்க நன்றி தாத்தா. இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக திருக்குர்ஆனை ஓதுவதை வழக்கமாக கொள்வேன்" என்று கூறினான்.


Monday, June 09, 2008

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.

தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.

ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்றவில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,

தன்னுடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,

யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.

பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக்குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார்.

ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.

குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.

ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்பினீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு அவர் கூறினார் "எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் 'நான் ஒரு சிறுவன்' என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்."

மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்

மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர்.

இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118).

எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!
இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.

நன்றி: சுவனத்தென்றல்

வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ஜெர்மன் விஞ்ஞானி (ஆங்கிலம்)

Thursday, June 05, 2008

நபியவர்களின் வாழ்வினிலே! - வினோத பேரம்

நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர்.

மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர்.

நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: சில குறைஷித் தலைவர்கள் அபூதாலிபிடம் சென்று ''அபூதாலிபே! நிச்சயமாக உமது சகோதரர் மகன் எங்களது கடவுளர்களை ஏசி, எங்களது மார்க்கத்தையும் குறை கூறுகிறார். எங்களில் உள்ள அறிஞர்களை மூடர்களாக்கி எங்களது மூதாதையர்களை வழிகெட்டவர்களாக்கி விட்டார். நீரும் அவருக்கு எதிரான எங்களது மார்க்கத்தில் இருப்பதால் இவ்வாறான செயல்களிலிருந்து அவரை நீரே தடுத்துவிடும். அல்லது எங்களிடம் ஒப்படைத்துவிடும். அவரை என்ன செய்வதென நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம்'' என்றனர்.
அபூதாலிப் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்புக் குறித்து அபூதாலிப் நபி (ஸல்) அவர்களிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வழக்கம்போல் நபி (ஸல்) அவர்கள் தங்களது அழைப்புப் பணியைச் செய்தார்கள். இதைக் கண்ட குறைஷியர்கள் கோபமுற்று மறுமுறை அபூதாலிபை சந்திக்க நாடினர். இம்முறை மிக வன்மையாகக் கண்டித்துப் பேச வேண்டுமென முடிவு செய்தனர்.

குறைஷித் தலைவர்கள் அபூதாலிபை சந்தித்து ''அபூதாலிபே! நீர் வயது முதிர்ந்தவர். எங்களது மதிப்பைப் பெற்றவர். நாங்கள் உமது சகோதரர் மகனைத் தடுத்து நிறுத்தக் கூறியும் நீர் அவரைத் தடுக்கவில்லை. அவர் எங்களது மூதாதையர்களைத் திட்டுவதையும் எங்களது அறிஞர்களை மூடர்களாக்குவதையும் எங்களது கடவுளர்களைக் குறை கூறுவதையும் கண்டு நாங்கள் பொறுமை காக்க முடியாது. நீரே அவரை சரிசெய்துவிடும். இல்லையெனில் நமது இரு கூட்டத்தால் ஒரு கூட்டம் அழியும் வரை உம்முடனும் அவருடனும் நாங்கள் போர் செய்வோம்'' என்றனர்.
இந்த எச்சரிக்கையும் அச்சுறுத்தலும் அபூதாலிபுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து நடந்ததைக் கூறி ''எனது சகோதரர் மகனே! உமது கூட்டத்தார் என்னிடம் இவ்வாறெல்லாம் கூறிச் சென்றார்கள். எனவே, நீ என்மீது கருணை காட்டு! பலவீனமான என்னை தாங்கவியலா துன்பத்தில் ஆழ்த்திவிடாதே'' என்றார்.

அபூதாலிப் மனம் தளர்ந்து தன்னைக் கைவிட்டு விட்டார் என்று கருதிய நபி (ஸல்) அவர்கள் ''என் பெரியதந்தையே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது ஏகத்துவ அழைப்புப் பணியை விடுவதற்காக அவர்கள் சூரியனை எனது வலக்கரத்திலும், சந்திரனை எனது இடக்கரத்தில் வைத்தாலும் அல்லாஹ் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும்வரை அல்லது நான் அழியும்வரை இதை விடமாட்டேன்'' என்று கூறிவிட்டு கண் கலங்கியவர்களாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து ''என் சகோதரர் மகனே! நீ விரும்பியதைச் செய்துகொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த நிலையிலும் எவரிடமும் உம்மை ஒப்படைக்க மாட்டேன்'' என்று கூறி சில கவிதைகளையும் பாடினார்.

''அல்லாஹ்வின் மீது சத்தியம்!
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும்
உன்னை நெருங்க முடியாது.
நான் மண்ணில் தலைவைக்கும் வரை!
உனது விஷயத்தை வெளிப்படையாக சொல்.

உன்மீது குற்றமில்லை.
கண்குளிர்ந்து மகிழ்ச்சி கொள்!...''


நபி (ஸல்) தங்களது ஏகத்துவ அழைப்பை நிறுத்தாமல் தொடர்வதைக் கண்ட குறைஷியர்கள், அபூதாலிப் முஹம்மதை கைவிட மறுத்து நம்மைப் பிரியவும் விரோதித்துக் கொள்ளவும் துணிந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டனர்.

அவர்கள் வலீதின் மகன் அமாராவை அழைத்துக் கொண்டு அபூதாலிபிடம் வந்தனர். ''அபூதாலிபே! இவ்வாலிபர் குறைஷியரில் சிறப்பாக வளர்க்கப்பட்ட அழகிய வாலிபர். அவரது சகல உரிமைகளும் உமக்குரியது. இவரை உமது மகனாக வைத்துக் கொண்டு, உமது மார்க்கத்திற்கும் உமது மூதாதையர்களின் மார்க்கத்திற்கும் முரண்பட்டு, உமது கூட்டத்தாடையே பிளவை ஏற்படுத்தி, அவர்களின் அறிஞர்களை மூடர்களாக்கிய உமது சகோதரர் மகனை எங்களிடம் ஒப்படைத்துவிடும். ஒருவருக்கு ஒருவர் என சரியாகி விடும். நாங்கள் அவரைக் கொன்று விடுகிறோம்'' என்றனர்.

அவர்களிடம் அபூதாலிப் மிகுந்த கோபத்துடன் ''அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பேரம் மிக மோசமானது. உங்கள் பிள்ளையை என்னிடம் ஒப்படைப்பீர்கள். அதை நான் ஊட்டி வளர்க்க வேண்டும்! எனது மகனை உங்களிடம் நான் ஒப்படைப்பேன். நீங்கள் அவரைக் கொலை செய்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒருபோதும் நடக்காது'' என்று கூறினார்.

அதற்கு முத்இம் இப்னு அதீ (அப்து மனாஃபின் கொள்ளுப்பேரர்) ''அபூதாலிபே! உமது கூட்டத்தினர் உமக்கு நீதமான தீர்வைக் கூறி நெருக்கடியிலிருந்து உம்மை விடுவிக்க முயன்றனர். ஆனால் நீர் அதில் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லையே!'' என்றார்.

அதற்கு அபூதாலிப் ''அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நீதம் காட்டவில்லை. (முத்இமே) நீ என்னைக் கைவிட்டு விட்டு எனக்கு எதிராக இக்கூட்டத்தினரைத் தூண்டிவிடுகிறாய்; அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறாய். நீ விரும்பியதைச் செய்துகொள்'' என்று கோபமாகக் கூறினார்.

அபூதாலிபின் மூலமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்கிவிட வேண்டுமென்ற தங்களது திட்டத்தில் தோல்வியுற்ற குறைஷியர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதாலிப் தானாக விலகிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டனர்.

அர் ரஹீக்குல் மக்தூம் என்ற நூலிலிருந்து...

Thursday, May 29, 2008

23 முறை கேட்ட கேள்வி!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும்.

முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Tuesday, May 27, 2008

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

நன்றி: தாருல் ஹுதா

Wednesday, May 21, 2008

இஸ்லாமிய போதனைகள் - 1. சமத்துவ சமுதாயம்

'மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களே!' என்று அறிவிக்கிறது இஸ்லாம்.

'மனிதர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. மேலும் படைக்கப் பட்ட உயிரினங்கள் பலவற்றை விடவும் மேன்மைப் படுத்தப் பட்டவர்கள் மனிதர்களே' எனவும் திருமறையும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளும் தெளிவு படுத்துகின்றன.

உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும் நானே உங்கள் அதிபதி. எனவே நீங்கள் எனக்கே அடிபணியுங்கள். (குர்ஆன் 21:92)

"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்". (குர்ஆன் 49:13)

"மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (குர்ஆன் 4:1)

"நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்." (குர்ஆன் 17:70)

"கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர்; அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபியல்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்". - நபிகள் நாயகம் (ஸல்)

படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான் - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: பைஹகி

Friday, May 16, 2008

எதிரிகளாலும் போற்றப் பட்ட முஹம்மது நபி(ஸல்)!

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இரு முஸ்லிமல்லாதவர்களுக்கிடையே நடைபெற்ற கீழ்க்கண்ட உரையாடல் நல்லதொரு விளக்கமளிக்கிறது.


உரையாடிய இருவரில் ஒருவர் ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்). மற்றொருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிரியாக பாவித்திருந்த அபூஸுஃப்யான்.


அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம் அது. அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)


அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.


மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?


அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.


மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.


(தனது மொழிபெயர்ப்பாளடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.


அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.


மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?


அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.


மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’.


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?


அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.


மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?


அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.


மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?


அபூஸுஃப்யான்: இல்லை.


மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?


அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)


மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?


அபூஸுஃப்யான்: ஆம்!


மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?


அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.


மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?


அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.


அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:


"உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ‘’அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'’ என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.


அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.


அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன்.


அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.


அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.


அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.


அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.


அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.


அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய்.



‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார்.


பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.


அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ‘’எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின் பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'’


அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார்.


(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

Thursday, May 15, 2008

தாய்ப் பாசத்திற்கு பரிசு சுவனம்!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்,

"தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஒர் எழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன்.

அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார்.

அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார்.

அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்'' என்றோ அல்லது "அப்பெண்ணுக்கு நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்'' என்றோ கூறினார்கள்."

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்

தனக்கின்றி தான் பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக - ஊட்டிய பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.

இன்றைய தாய்மார்களுக்கோ தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத் தாய்மார்கள் பொருட்படுத்துவதில்லை. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.

நம்மைச் சுற்றி வலம் வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தவறுவதில்லை. அனால் மனித இனத்தைச் சேர்ந்த நம் தாய்மார்களோ பெற்ற பிள்ளைக்கு 'புட்டி' பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம் குழந்தையின் குடலில் கோளாறு எற்பட வழிவகுக்கின்றனர்.

ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.

நாகரீக மோகத்தில் இராப் பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தாய் தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர் வீட்டில் விட்டு விட்டு வெளிநாடுகளில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.

இப்படிப்பட்ட படு மோசமான நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட வேண்டும்.

நன்றி: சித்தார்கோட்டை.காம்

Tuesday, May 13, 2008

நான் இஸ்லாத்தை தழுவியவிதம்! - Shariffa Carlo

இஸ்லாமிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சகோதரி, அதே இஸ்லாமிய கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டு முஸ்லிமான நிகழ்வு..

"நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன்.

என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். இவர்கள் இப்பதவியில் இருந்துக்கொண்டே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாமல் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தினார்கள்.

என்னிடம் இயற்கையிலே அமைந்த துணிச்சல், தன்னம்பிக்கை பெண்ணுரிமைக்காக போராடும் தன்மையைக் கண்டு என்னை அவர்கள் அனுகி International Relations என்ற கல்விப் பயிற்சியை முடித்தால் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றவும் அதனைக் கொண்டு அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும் என்று அவர்கள் கூறியது எனக்கு பொருத்தாமகத் தோன்றியது. எகிப்திய பெண்களை நான் தொலைக்காட்சியில் பார்த்ததில் அவர்கள் பளு, சுமை நிறைந்தவர்களாக கண்டதால் அவர்களை சுதந்திர இருபதாம் நூற்றாண்டிற்கு வழிகாட்ட நினைத்தேன்.

இஸ்லாமிய நாட்டில் இந்தப் பணியை தொடங்க இருப்பதால் நான் குர்ஆனையும், ஹதீதையும் இஸ்லாமிய வரலாறுகளையும் கற்றுக்கொண்டேன். நாங்கள் கொண்ட நோக்கப்படி இஸ்லாத்தை பற்றி பிரச்சாரத்தின் மூலம் திசை திருப்ப ஆரம்பித்தேன். அதனால் எனக்கு மிக பயமாகவும் இருந்தது. இதை முறியடிக்க கிறிஸ்தவத்தை கற்க எண்ணி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு (Ph.D in Theology, Harvard University) பேராசிரியரிடம் அனுப்பப்பட்டேன். நான் ஒரு சிறந்த பேராசிரியரிடம் தான் கிறிஸ்தவத்தை கற்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மை அப்படி அல்ல. காரணம் அவர் ஒரு (Unitarian Christian ) அதாவது மாதா, பிதா, பரிசுத்தஆவி என்ற கிறிஸ்தவ கொள்கையில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையில் ஜீஸஸ் (ஈஸா நபி) அவர்களை இறைவனின் தூதர் என்றுதான் நம்புகிறார்.

இதனை நிரூபிக்க அவர் என்னிடம் பழைய பைபிள் மூல நூல்களை (Greek, Hebrew, and Aramaic) எடுத்து பைபிளில் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னிடம் நிரூபித்தார். இதைக் கண்டதும் நான் என் கிறிஸ்தவ மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்தேன். இருந்த போதிலும் எந்த நோக்கத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேனோ என் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படித்து வந்தேன். இதற்கிடையில் இஸ்லாத்தை அறியும் பொருட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் உரையாடி வந்தேன்.

என்னுடைய ஆர்வத்தை கண்ட முஸ்லிம் சகோதரர் (MSA) என்னுடைய சந்தேகங்களை களைந்து இஸ்லாத்தை மேலும் கற்றுக்கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். அச்சகோதரருக்கு மென்மேலும் அல்லாஹ் நன்மையை அளித்தருள்வானாக!

ஒரு நாள் இந்த சகோதரர் என்னிடம் இருபது முஸ்லிம் சகோதரர்கள் (ஜமாஅத்) வந்திருப்பதாகவும் இஷா வேளைக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். நான் அங்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அவர் அதிகம் கிறிஸ்தவத்தை அறிந்தவராயிருந்தார். நானும் அவரும் பைபிளையும், குர்ஆனையும் பல கோணங்களில் காலை பஜ்ர் நேரம் வரை கருத்து பரிமாற்றமும் விவாதமும் செய்தோம்.

மூன்று ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்லி கொடுக்கப்பட்டேன், வாதம் புரிந்தேன், குறை சொல்லப்பட்டேன் ஆனால் யாரும் என்னை இஸ்லாத்தை தழுவ அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இவர் என்னை இஸ்லாத்தை தழுவும்படி அழைப்பு விடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் இதயத்தை திறந்தான். நான் முஸ்லிமாக விருப்பம் தெரிவித்து கலிமாவை மொழிந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். நான் எனது இறுதி நாள் வரை சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். ஆமீன்!"

ஆங்கிலத்தில்: Trained to destroy Islam
தமிழில்: ஜகபர் அலி

Monday, May 12, 2008

நற்குணம் கொண்டு அழகாகுங்கள்!

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு.

நபி(ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி(ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி(ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்:

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் நபி(ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நபி(ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள்.

ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார்.

அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார்.

நபி(ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி(ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள்.

ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும்.

"நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார்.

அப்போது சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர்.

நபி(ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.

நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தங்களது சொல், செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.

அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார்.

நபி(ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)

....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4) அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம்.

நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன.

இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார்.

சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது.

சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை. இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.

இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

நன்றி: ReadIslam.net